Saturday, October 22, 2011

சிறுதுளிகள் - (10/22/2011) - சனிக்கிழமை

உணவே மருந்து. இதை உணர்ந்து இருக்கிறீர்களா? பசிக்கும் போது மட்டும் உண்டு, வயிறு நிரம்ப சாப்பிடாமல், கொஞ்சம் குறைவாக உண்டு வந்தால் எந்த நோயும் வராது. அப்படி உண்ணும் போது கூட நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதை என்னவோ நாம் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுத்தார்கள்தான்.
       ஆனால் நாம் தான் அதையெல்லாம் மறந்து விட்டோம். உண்ணும்போது கணக்கு வழக்கு இல்லாமல் உண்டு விட்டு, ஜீரணிக்க ஜெலுசிலையும், வேறு மாத்திரைகளையும் தேடுவதுதான் இப்போதைய வழக்கமாகி விட்டது. அது போலவே உறக்கம். 90 களில் எல்லாம் இரவு 9 மணிக்குமேல் விழித்திருப்பது வாய்ப்பே இல்லாத ஒன்றாக இருந்தது.
       ஊரில் எதாவது திருவிழா நாட்கள் அல்லது அத்திபூத்தாற்போல் செல்லும் செகண்ட் ஷோ சினிமா நாட்கள் மட்டும் தான் 9 மணிக்கு மேல் உறங்கப்போகும் நாட்களாக இருந்தது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி அறிமுகமானது 1992 என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து 9 மணிக்கு உறங்கப்போகும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. இப்போதெல்லாம் இரவு உணவு என்று ஒன்றிருந்தால் அது 11 மணிக்கு அப்புறம் தான் என்று ஆகிவிட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பாலான நேரங்களில் நாம் சொல்லவோ அல்லது பிறர் சொல்லியோ கேட்டிருப்போம். "நேரமே இல்லை". யோசித்துப்பார்த்தால் நேரம் இல்லை என்பதை விடவும் அதைச் செய்ய மனமில்லை என்பதுதான் நிறைய நேரங்களில் உண்மை. அப்படியே செய்வதற்கு மனமிருந்தாலும், அதன் தேவை/முக்கியத்துவத்தை வெகுகுறைவாகத்தான் மதிப்பிடும். அவ்வாறு ஒப்புக்கொள்வதற்கு மனமில்லாமல், நேரமில்லை என காரணம் கற்பித்துக்கொள்கிறோம். அதேபோல என்னிக்காவது ஒரு நாள் இதை செய்யப்போறேன்(அடுத்த மாசம் பண்றேன், ஆறு மாசத்தில பண்றேன்) என்றெல்லாம் யாராவது சொன்னால், கண்டிப்பாக அது நடக்கப்போவதில்லை என உறுதியாக கூறலாம். உள்ளுணர்வு நம்மை எச்சரிப்பதை சமாதானப்படுத்த "நா அப்புறமா செய்யப்போறேன்" என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவ்வளவு வயதானாலும், குழந்தைதனமான ஆசைகள் என்பது எல்லோருடைய மனதிலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் வயது காரணமாகவோ, அல்லது மற்றவர்கள் என்ன நினைத்து விடுவார்களோ என்று அதை செய்யாமல் விட்டுவிடுவோம். அதையும் மீறி எதாவது ஒரு ஆசையை செய்து பாருங்கள். இனம்புரியாத ஒரு சந்தோசம் மனதில் வருவதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். உதாரணத்திற்கு, கடற்கரைக்கு குடும்பத்தோடு சென்றால், கடலில் கால் நனைக்க மனம் விரும்பினாலும், "அய்யோ, இந்த வயசுக்கு அப்புறம் போய் சின்ன குழந்தை மாதிரியா" என நினைத்து அமைதியாக இருந்து விடத்தோன்றும். தன் வயதையொத்த இன்னொருவர் ஆனந்தமாக கடலில் விளையாடியதைப் பார்த்தாலும், மனைவி என்ன சொல்லுவாளோ என எண்ணி சும்மா இருந்து விடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மனம் மிக விந்தையானது. அது காயப்படும் நேரங்களில் அதை காப்பாற்றிக் கொள்ள அந்த சூழ்நிலையிலிருந்து வேறு எங்காவது ஒடிவிடும். உடல் அங்கேதான் இருக்கும் ஆனால் மனம் மட்டும் வேறுஎங்காவது இருக்கும். நேற்று அப்படித்தான், அலுவலகத்தில் மேலதிகாரி சம்பந்தமில்லாமல் தனது அதிகாரத்தைக் காட்ட நினைத்து, அர்ச்சனையை ஆரம்பித்தான். 5 வினாடிகள்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தான், நானோ நாளைக்கு ஒரு நாளை தாட்டி விட்டால் போதும், சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறைக்கு என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்து எங்கெங்கோ மனம் சென்றது. கொஞ்ச நேரம் கழித்து, "என்ன புரிஞ்சுதா" என குரல் கேட்டு மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment