Wednesday, September 28, 2011

சிறுதுளிகள் - (28/09/2011) - புதன்

பெரும்பாலான நேரங்களில், மனம் வாழ்க்கை என்பது ரொம்பவுமே சீராக செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அப்படி இல்லாத போது சங்கடப்படுகிறது. கிரிக்கெட் பார்ப்பதில் உங்களுக்கு நல்ல விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். இந்தியா - பாகிஸ்தான் மேட்ச். இந்தியா முதலில் பேட் செய்கிறது. விக்கெட்கள் மடமடவென சரிந்து கொண்டு இருக்கிறது. 5 விக்கெட்டுக்கு 60 ரன். 20 ஓவர் முடிந்து விட்டது. சச்சின் மற்றும் புதுமுகம் ஒருத்தரும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். 150 வந்தாலே பெரிய விஷயம் என்று நினைக்கிறோம்.
இன்னிக்கு மேட்ச் அவ்வளவுதான் என்று மனம் முடிவு செய்து விடுகிறது. அவுட் ஆன எல்லோரையும் கண்டபடி திட்டிக் கொண்டும், இவருக்கு பதிலாக வேறு ஒருவரை இறக்கி இருக்கலாம் என்று சிலபல ஐடியாக்களை கொடுத்துக்கொண்டு இருப்போம்.  அந்த நேரத்தில், சச்சின் இரண்டு 4 அடிக்கிறார். அவ்வளவு தான், உடனே மனம் சந்தோஷப்பட்டு, ரன்ரேட் கணக்குபோட ஆரம்பிக்கும். ஓவருக்கு ஒரு 4 அடிச்சாலும், 30 ஒவருக்கு 120 ரன். கடைசி 5 ஒவர்ல 50 ரன் அடிக்கலாம். extra ஒரு 10-15 ரன். மொத்தமா 230 கிட்ட வந்திடும். பொலிங்க் மட்டும் கொஞ்சம் நல்லா போட்டா இன்னிக்கு ஜெயிச்சிரலாம். - இதப்பாரேன்... 2 நிமிடம் முன்னாடி வரை இது அவ்வளவுதான் என்று பேசிக் கொண்டிருந்தவன், இப்போது மேட்ச்சை ஜெயிக்கும் அளவுக்கு கணக்கு போடுகிறான். இதுக்கு என்ன காரணம் - சச்சின் அடிச்ச ரெண்டு 4 தான். நம்ம வாழ்க்கைலயும் இது போலத்தான், துவண்டு போயிருக்கும் மனசு ஒரு சின்ன நல்ல விஷயம், நம்பிக்கை தர்ற மாதிரி நடந்தால், இனி எல்லாமே நல்லா நடக்கும் அப்படினு நம்பும்...
-------------------------------------------------------------------------------------------------------------
மெயில் ஃபார்வடாக வந்த விஷயம். நன்றாக இருந்தது. அதை பதிந்தால் நன்றாக இருக்கும் என் தோன்றியது.
நீங்கள் ஒரு விருந்திற்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே விதவிதமான வடிவத்தில், அழகான காப்பி கோப்பைகள் வைத்திருக்கிறார்கள். நமக்கு இருப்பதிலேயே அழகான கோப்பையை எடுத்துக்கொண்டு காப்பி குடிக்கத்தான் தோன்றும். அப்படி குடிக்கும்போது கூட, மற்றவர்கள் வைத்திருக்கும் கோப்பைகளை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டு, நம்முடைய காப்பி கோப்பையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கத்தோன்றும். ஒருவேளை நாம் வைத்திருக்கும் காப்பி கோப்பை நன்றாக இல்லாதது போல தோன்றினால், மனம் வருத்தப்படும். காப்பி நன்றாகவே இருந்தாலும் அதன் சுவையை உணர முடிவதில்லை. யோசித்துப்பார்த்தால், காப்பி கோப்பைக்கும், காப்பியின் சுவைக்கும் சம்பந்தம் இல்லை. எந்த கோப்பையில் காப்பி குடித்தாலும், அதன் சுவை ஒரே மாதிரிதான் இருக்கும். வாழ்க்கையும் காப்பி போலத்தான். வாழும் விதமாக உள்ள காப்பி கோப்பையின் மீது கவனம் வைத்து, காப்பியின் சுவையை மறந்து விடுகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
If we want to receive, we need to learn to give first... Maybe we will end up with our hands empty, but our hearts will be filled with love.
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவாளர் Jackiesekar ன் பேட்டி மக்கள் தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி இருந்தது. நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்த்தேன். ஒரு கேள்விக்கு பின்வரும் பதில் சொல்லிருந்தார்.
"கவர்ச்சிக்காகவும், தான்தோன்றித்தனமாகவும், தனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று எழுதுபவர்கள் வெகுசீக்கிரத்தில் புறக்கணிக்கப்படுவார்கள். நீண்ட நெடுநாள் அவர்களால் பயணிக்க முடியாது. உங்கள் எழுத்தில் உண்மைத்தன்மை இல்லை என்றபோது எப்படி வாசிப்பார்கள்"
எவ்வளவு நிச்சயமான வார்த்தைகள். இரண்டு நாட்களாகவே இதைப் பற்றி யோசித்து கொண்டிருந்தேன். புதிதாக பதிவு எழுத அரம்பித்து இருக்கும் எனக்கு இது மிக நல்ல அறிவுரை. என் எழுத்தை துவக்கத்தில் இருந்தே சீராக வைத்துக்கொள்ள இந்த விஷயம் உதவும். நன்றி Jackie.
-------------------------------------------------------------------------------------------------------------
ஏதேனும் ஒரு கட்டத்தில் நாம் வளர்வதை நிறுத்தி விடுகிறோம். மன வளர்ச்சியைப் பற்றி சொல்கிறேன். எதாவது ஒரு நிகழ்ச்சி நம்மை, நம் வாழ்வை புரட்டிப்போடுகிறது. அதற்குப் பிறகு, நாட்கள் நகர்ந்தாலும், உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மனம் முன்னோக்கி நகர்வதை நிறுத்திவிடுகிறது. அந்த நிகழ்ச்சி, எதுவாக வேண்டுமாக இருக்கலாம். காதல் தோல்வி, மிக நெருங்கிய நண்பனின் துரோகம். நெருங்கியவர்களின் இறப்பு, இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இப்படி வளர்வதை நிறுத்தி விட்டோம் என்று தெரியாமலே வாழ்க்கை நகர்ந்து விடுகிறது. அப்படியே தெரிந்தாலும் கூட அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளிவர தெரிவதில்லை/முடிவதில்லை.

No comments:

Post a Comment